Monday, 10 August 2020

கொரோனாவுக்கு மருந்து உண்டு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏற்கனவே இரத்த சர்க்கரை நோய், இரத்த அழுத்தம்,இதய நோய்களுக்கு மருந்துகளை எடுத்துக் கொண்டு வரும் 52 வயது நபர் நோய் தொற்று உறுதி செய்ய பட்டு முதல் இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து விட்டு ( home quarantine)3 வது நாள் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4வது நாள் இறந்துவிட்டார்.

அவரது உறவினர் ஒருவரிடம் இவ்வளவு பிரச்சினைகள்(இதய நோய், இரத்த சர்க்கரை நோய்.உயர்இரத்த அழுத்தம்) இருக்கும் போது ஏன் அவரை முதலிலேயே மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டில் இருக்க முடிவெடுத்தீங்கனு நான் கேட்டதற்கு அவர் கூறிய பதில் "கொரோனாவுக்குதான் இன்னும் மருந்தே கண்டுபுடிக்கலயாமே.அங்க போறவங்களுக்கு ரெண்டு சத்து மாத்திரையை கொடுத்துட்டு மூணு வேளை சாப்பாடு போட்டு 10 நாள் சும்மா தான் இருக்கவைச்சுட்டுதான் வீட்டுக்கு அனுப்பி வைப்பாங்கனு எல்லாரும் சொன்னாங்க . அதான் வீட்டுலயே இருக்கட்டும்னு முடிவு பண்ணுனோம்".

நிற்க..

கொரோனா நோய்க்கு மருந்துகள் இல்லையா..
    கொரோனா நோய் வரும் முன்பே தடுப்பதற்கு தடுப்பூசி தான் கண்டுபிடிக்கபடவில்லையே தவிர கொரானா நோய்க்கான உயிர்காக்கும் மருந்துகள் எல்லா அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு நோயின் தீவிரத்தன்மையை பொறுத்து கொடுக்கப்படுகிறது.. அவற்றுள் முக்கிய மருந்துகள் சில..

1.ரெம்டெசிவிர்(Remdesivir)ஊசிமருந்து.(antiviral)
               உடலில் நுழைந்த வைரஸ் பல்கி பெருகுவதை தடுக்கும் மருந்து..நோய்தொற்று ஏற்பட்ட ஆரம்பத்திலேயே கொடுக்கப்படும் போது நோயாளிகளின் உடலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கிறது..

2.ஹெபாரின் ஊசி மருந்து(anticoagulant)
           கொரோனா வைரஸ் நோய் நுரையீரல் இரத்த குழாய்களில் இரத்த அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தும்.அது நிகழாமல் தடுப்பதற்கு low molecular weight ஹெபாரின் ஊசி மருந்து தோலுக்கு அடியில் போடப்படுகிறது.

3. ஸ்டீராய்டு ஊசி மருந்துகள்..
                       மெதில்ப்ரெட்னிசலோன்,
டெக்சாமெதஸோன் போன்ற ஸ்டீராய்டு மருந்துகள் செல்அழற்சிவீக்கத்தை தவிர்க்க( anti-inflammatory ) தரப்படுகிறது.

4.நுண்ணுயிர் எதிர்ப்பு(antibiotic) ஊசி மருந்துகள்.
       வைரஸ் தொற்றின் விளைவால் உடலில் நுரையீரலில் பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய்தொற்றிற்க்கு எதிராக தரப்படுகிறது.

5. டோசிலிஷூமேப்  (tocilizumab) ஊசி மருந்து..
               கொரோனா நோய் தொற்றின் இறுதியில் ஏற்படும் சைடோகைன் புயல்(cytokine storm) எனும் உயிர்ப்பரிக்கும் நிகழ்வை தடுக்க வஜ்ராயுதம் போல் தரப்படுகிறது.

6.ஆக்ஸிஜன்.
              கொரோனா வைரஸ் நுரையீரலை தாக்குவதால் உடலில் ஆக்சிஜன் செறிவு (oxygen Saturation)  குறைவதால் உடலில் உள்ள உறுப்புகளுக்கு கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.ஆக்ஸிஜன் செறிவு குறையும் போது அதற்கேற்ப செறிவுள்ள ஆக்சிஜன் தரப்படுகிறது.

7.சிபாப்(cpap) தெரபி (Continuous positive airway pressure therapy)
        உடலில் ஆக்சிஜன் செறிவை ஆக்சிஜன் தருவதன் மூலம் பலனளிக்காமல் போகும்போது தரப்படுகிறது.

8.செயற்கை சுவாச கருவி(ventilator).
        இறுதி முயற்சியாக செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை தரப்படுகிறது..
     
         மேற்கூறிய அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் நோயாளிகளின் ஆய்வக அறிக்கைகளின் அடிப்படையிலும் நோயின் தீவிரத்தன்மையின் அடிப்படையிலும் மருத்துவர்களினால் தீர்மானிக்கபட்டு அனைத்து  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு இலவசமாக தரப்படுகிறது.

               சமூக வலைத்தளங்களில் கொரோனாக்கு மருந்தில்லை.கொரோனா என்று ஒரு நோயே இல்லை. பணத்திற்காக சும்மா கொரோனா என்று கூறி பத்து நாட்கள் மூணு வேளை சாப்பாடு போட்டு கண்துடைப்பிற்காக ரெண்டு சத்து மாத்திரைகளை கொடுத்து வீட்டிற்கு அனுப்புகிறார்கள் என்று  நோய் அறிகுறிகளற்ற தீவிர நிலையை அடையாத பெரும்பான்மையான மக்கள் நோய்க்காக தனிமைப் படுத்தப்படும் தனிமை வார்டுகளில் நடப்பதை வைத்து கட்டுக்கதைகளை பரப்பும் நீங்கள்.. ஒரு நாள் தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு பார்வையாளராக பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளை பாருங்கள்.கொரோனாவின் மற்றொரு கோரமுகமும் உண்மை நிலையும் புரியும்.நீங்கள் பரப்பும் வதந்திகளால் நான் மேற்கூறியபடி நிகழும் மரணங்களில் உங்கள் பங்களிப்பும் உண்டு என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..

 மருத்துவர். P.M.A.பீர் மைதீன்..

No comments:

Post a Comment

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...