Tuesday, 19 November 2024

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம்

ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் குபேர கிரிவலம். சிலருக்கு இது பற்றி தெரிந்திருக்கும். பலருக்கும் இந்த குபேர கிரிவலம் பற்றி தெரிந்திருக்காது. அப்படி தெரியாதவர்கள் இந்த குபேர கிரிவலத்தை பற்றியும், அதன் மகிமையை பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

​கிரிவலத்தின் மகிமை :
சிவ வழிபாடும், திருவண்ணாமலை கிரிவலமும் விதியையே மாற்றி எழுதக் கூடிய சக்தி வாய்ந்தது என சொல்வார்கள்.

திருவண்ணாமலையை எங்கு இருந்தும் நினைத்து, மனதார வழிபட்டாலே அவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட ஆன்மிக பூமியில் கிரிவல பாதையில் அடிக்கு 108 லிங்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவை அனைத்தையும் நினைத்து, வழிபட்டு, வலம் வந்தால் எத்தனை மகா புண்ணியம் கிடைக்கும் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். அதிலும் சில குறிப்பிட்ட நாட்களில் கிரிவலம் வந்தால் அளவில்லாத பலன்களை வாழ்க்கையில் பெற முடியும்.

#கோடீஸ்வர_யோகம்_தரும்_குபேர_கிரிவலம் :

நாம் ஒவ்வொருவரும் முற்பிறவியில் செய்த ஏதோ ஒரு பாவத்தின் பலனாக, கர்மவினையால் இப்பிறவியில் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் செய்த பாவங்கள் மட்டுமல்ல நம்முடைய முன்னோர்கள் செய்த கர்மவினைகளின் பலன்களில் ஒரு பகுதி நம்மை வந்து சேரும் என்றும் சாஸ்திரங்கள் சொல்கின்றன. அப்படி கர்மவினையின் பயனாக வரும் துன்பங்களில் ஒன்று தான் பணக்கஷ்டமும். இதற்கு பல நிரந்தரத் தீர்வுகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றுதான் குபேர கிரிவலம். பிறந்த ஜாதகத்தில் கோடீஸ்வரயோகம் இல்லாவிட்டாலும் கோடீஸ்வரர் ஆகும் யோகத்தை உருவாக்கி தருவது தான் குபேர கிரிவலம்.

அதென்ன குபேர கிரிவலம்?
ஒவ்வொரு தமிழ் வருடமும், கார்த்திகை மாதம் வரும் சிவராத்திரி அன்று வான் உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேர பகவான் பூமிக்கு வருகிறார். அவர் திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் 7 வது லிங்கமான குபேர லிங்கத்துக்கு தினப் பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை) பூஜை செய்கிறார். அப்படி பூஜை செய்துவிட்டு, இரவு 7 மணியளவில் குபேர பகவானே கிரிவலம் செல்கிறார். அதே நாளில் நாமும் கிரிவலம் சென்றால், நமக்கு அண்ணாமலையின் அருளும், சித்தர்களின் அருளாசியும், குபேரனது அருளும் கிடைக்கும். இதன் மூலம் நாமும், நமது முன்னோர்களும் செய்த பாவங்கள் தீரும். நாம் மட்டுமல்ல நமது அடுத்த ஏழு தலைமுறையும் நிம்மதியாகவும், செல்வச் செழிப்புடனும் வாழும் என்பது ஐதீகம்.

குபேர கிரிவலம் செல்லும் முறை :

கார்த்திகை மாத சிவராத்திரி அன்று ஒரே ஒரு நாள் கிரிவலம் சென்றால் அடுத்த ஒரு வருடத்திற்கு நமது வருமானம் நியாயமான விதத்தில் அதிகரிக்கும். இந்த ஒரு மணி நேரத்தில் குபேர லிங்கத்தை தரிசிக்க முடியாவிட்டால் வருத்தப்பட வேண்டாம். மானசீகமாக குபேர லிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி வேண்டிக் கொண்டால் போதும். இரவு 7 மணி ஆனதும் குபேர லிங்கத்தில் இருந்து புறப்பட்டு, மீண்டும் குபேர லிங்கத்தில் வந்து கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.

கிரிவலம் செல்வதற்கான விதிமுறைகள் :

* கிரிவலம் முடித்ததும் வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும், பிறர் வீடுகளுக்குச் செல்லாமலும் நேராக அவரவர் வீடு திரும்ப வேண்டும்.

* கிரிவலம் செல்லும் போது செருப்பு போடக்கூடாது.

* ருத்ராட்சம் அணிந்து, வேட்டி சட்டை (பெண்கள் அவரவர் பாரம்பரிய உடை) அணிந்து சிவ மந்திரங்களை மனதுக்குள் ஜபித்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும்.

* கிரிவலம் முடிந்து அன்று இரவு கண்டிப்பாக அண்ணாமலையில் தங்க வேண்டும் என்பது ஐதீகம்.தங்கி, மறு நாள் வேறு எங்கும் செல்லாமல் அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத சம்பிரதாயம். அப்படி செய்தால் மட்டுமே குபேர கிரிவலத்தின் பலன் நமக்குக் கிடைக்கும்.

* கிரிவலப்பாதையான 14 கி.மீட்டர்கள் முழுக்க ஏராளமான சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். நமது வீண் பேச்சு அவர்களுக்கு தொந்தரவாக இருக்ககூடாது என்பதால் வீண் பேச்சுக்கள் இன்றி கிரிவலம் செல்ல வேண்டும் என்பது விதி.

* முடிந்தால் கிரிவல பாதையில் உள்ள சாதுக்களுக்கு அன்னதானம் , வஸ்திர தானம் செய்வது கோடி புண்ணியம்.

குபேர கிரிவலம் 2024

குபேர கிரிவலம் 29.11.2024 வெள்ளி காலை 9.06 முதல் 30.11.2024 சனி காலை 10.46 வரை இருக்கிறது.

குபேர கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் ...