சிவபூஜை :
ஆன்மாக்களுக்கு ஆணவமாகிய மூலமல காரணத்தினாலே கன்மானுசாரமாக உண்டாகும் பிறப்பு அண்டசம், சுவேதசம், உத்பிச்சம், சராயுசம் என நால்வகைப்படும். இவைகளின் விரிவு என்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதமாகும். இவ்வாறுள்ள யோனிகளுள் மற்றை யோனிகள் எல்லாவற்றையும் போகத்தினாலும் பிராயசித்தம் முதலியவற்றாலும் நீக்கி, மனிதப்பிறப்பிலே வருதல் மிகுந்த அருமையாகும். இந்த அருமையாகிய மனிதப்பிறப்பைத் தந்தது பசுபதியாகிய பரமேசுவரனை மனசினாலே நினைத்தற்கும் வாக்கினாலே துதித்தற்கும், கைகளினாலே பூசித்தற்கும் கால்களினாலே வலம்வருதற்கும் தலையினாலே வணங்குதற்கும் செவிகளினாலே அவரது புகழைக் கேட்பதற்கும், கண்களினாலே அவரது திருமேனியைத் தரிசித்தற்குமாம். மேலுலகத்திலுள்ள பிரமா, விட்டுணு முதலிய தேவர்களும் இப்பூமியிலே வந்து சிவபெருமானை அருச்சிப்பார்கள். ஆதலால் *கிடைத்தற்கரிய இச்சரீரம் உள்ளபோதே* சிவபூசை பண்ணி பரமபுருஷார்த்தத்தை அடைதல் வேண்டும்.
"இப்படி எவன் பக்தியினோடு சிவனைப் பூசிக்கிறானோ அவனுக்கு ஆதித்தியோதயத்தினால் இருள் நீங்குதல் போல பாபம் உண்டாவதில்லை; அவனுக்கு உற்பாதங்களும் கிரகபீடைகளும் அழிகின்றன; எல்லா வியாதிகளும் நீங்கப்பெற்றவனாகின்றான்; சிவசாயுச்சியத்தை அடைகிறான்" என்று சிவபூசையின் பயன் சொல்லப்பட்டிருக்கின்றது..
சிவபூசாவிதி (சிவஸ்ரீ ச.குமாரசாமி குருக்கள் - 1956 - இரண்டாம் பதிப்பு) என்னும் நூலின் உபோற்காதப் பகுதியில் இருந்து...
No comments:
Post a Comment